Pages

Friday 7 September 2012

பெரியாரிசம்.......(பதிவு 10 )

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே, இந்த பெரியாரிசத்தை சற்று வித்தியாசமாக “வழக்காடு மன்றம்”  வடிவில் அலசலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது, எனவே........

வழக்காடு மன்றம்....

வழக்கு தொடுப்பவர் : ஞானசூனியன்.

வழக்கை மறுப்பவர் : ஆளவந்தான்.

இடம் : மக்கள் மன்றம்.

நடுவர் : மக்கள்.

வழக்கு விபரம் : சுயமரியாதை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என்ற அருமையான கொள்கைகளை கேவலப்படுத்திய ஈ.வெ.இராமசாமி நாயக்கர் குற்றவாளியே....

விசாரணை நாள் (1)

நடுவர் : ஈரோடு வெங்கட்ட ராமசாமி என்பவர் பின்னாளில் தந்தை பெரியார் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஒருவர் மீது ஒரு வழக்கு வருகிறதென்றால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இம்மக்கள் மன்றம் கருதுகிறது. மக்கள் மன்றம் முன் அனைவரும் சமமே என்ற கோட்பாட்டின்படி இந்த வழக்கை விசாரிக்க இம்மக்கள் மன்றம் தீர்மானிக்கிறது. எனவே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே உங்கள் வழக்கை பதிவு செய்யுமாறு அழைக்கிறோம்.

ஞானசூனியன் : மேன்மை தங்கிய நடுவர் அவர்களே, எனது வழக்கு ஈ.வெ.ரா அவர்கள்மீது பல குற்றச்சாட்டுகளை கொண்டது. எனவே ஒவ்வொரு குற்றச்சாட்டாக எடுத்துரைக்க அனுமதி வேண்டுகிறேன்.

நடுவர் : அனுமதி அளிக்கப்படுகிறது.

ஞானசூனியன் : கணம் நடுவர் அவர்களே எனது முதல் குற்றச்சாட்டு. “அனைவருக்கும் சுயமரியாதை தேவை என்பதை தனது கொள்கையாக பிரகனப்படுத்திக்கொண்ட ஈ.வெ.ரா அவர்கள் கேரளாவில் வைக்கம் போராட்டத்தின்போது தாழ்த்தப்பட்டோரின் சுயமரியாதையை அடகு வைத்தவர்தான் இந்த ஈ.வெ.ரா. எனவே இவரை நான் குற்றவாளி என்று குற்றம் சாட்டி மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தியிருக்கிறேன்.

நடுவர் : வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே இந்தக் குற்றச்சாட்டு பற்றி உங்கள் கருத்து மற்றும் மறுப்பு ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்.

ஆளவந்தான் : வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள் எனது கட்சிக்காராகிய நாடு போற்றும் “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை எந்த மரியாதையும் இல்லாமல் வெறுமனே ஈ.வெ.ரா என்று குறிப்பிட்டதிலிருந்தும், கேரளாவில் வைக்கத்தில் நடந்த தீண்டாமை கொடுமையையும், சாதிக் கொடுமையையும் அறியாமல் “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்மீது இப்படியொரு குற்றச்சாட்டை வைத்ததிலிருந்தும் எனக்கு ஒன்று உறுதியாகத் தெரிகிறது.

நடுவர் : என்ன அது?

ஆளவந்தான் : அவருடைய பெற்றோர்கள் அவருக்கு மிகச்சரியாக பெயர் சூட்டியுள்ளார்கள் என்பதும், அந்தப் பெயருக்கேற்றபடி தன்னை வெளிப்படுத்திக்கொண்டதும் உறுதியாகத் தெரிகிறது.

நடுவர் : தனிமனித விமரிசனம் தேவையில்லை. வழக்கு சார்ந்த உங்கள் கருத்தையும் மறுப்பையும் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

ஆளவந்தான் : கணம் நீதிபதி அவர்களே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள் வைக்கம் வரலாறு தெரியாமல் இப்படி பிதற்றுகிறார். அவருக்காக அந்த வரலாற்றை இங்கு எடுத்துரைக்க அனுமதி வேண்டுகிறேன்.

நடுவர் : அனுமதி அளிக்கப்பட்டது.

ஆளவந்தான் : திரு வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே கவனமாகக் கேளுங்கள். கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகரில் பின்னாளில் திருவாங்கூர் என்று மாற்றப்பட்ட நகரில் உள்ள கோயில்களில் தீண்டாமை கொடுமை நிலவியது. கோயில்களில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கோயில் இருக்கும் விதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்பு (சத்தியாகிரகம்) போராட்டம் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏப்ரல் 14 அன்று பெரியார் அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் ஒன்றாக கலந்து கோண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின்படி இப் போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவரகள் கலந்து கொள்ளவில்லை. பெரியார் கைது செய்யபட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிகொள்ளப்பட்டது. அதுமுதல் பெரியார் வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார்.
        இதுமட்டுமல்ல “வெண்தாடி வேந்தன் “பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்கள் தமிழக மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, எத்துனை எத்துனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார் தெரியுமா? இந்த நாடே அறியும். இப்படி நாடறிந்த ஒரு பெருந்தலைவரை, புரட்சி சிந்தனையாளரை, தத்துவ மேதையை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் இப்படியொரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள்.
        எனவே திரு வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள் இந்த குற்றச்சாட்டை திரும்பப் பெறவேண்டும். அல்லது மக்கள் மன்றம் இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து ஞானசூனியன் அவர்களை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன்.

நடுவர் : வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களை “குற்றச்சாட்டை திரும்பப்பெற வேண்டும் என்றுகேட்க வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களுக்கு உரிமை உண்டு. குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யுமாறு எங்களுக்கு உத்தரவிட வழக்கறிஞர்  ஆளவந்தான் அவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. எதிர்தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல், குற்றச்சாட்டை தீர விசாரிக்காமல் எப்படி குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யமுடியும்? எனவே குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதற்கில்லை. வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே உங்கள் குற்றச்சாட்டை தெளிவாகக் கூறவேண்டும்.

ஞானசூனியன் : மேன்மை தங்கிய நடுவர் அவர்களே, “வெண்தாடி வேந்தன் “பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்கள் தமிழக மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். இந்த நாடே அறியும். இப்படி நாடறிந்த ஒரு பெருந்தலைவரை, புரட்சி சிந்தனையாளரை, தத்துவ மேதையை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் இப்படியொரு பொய்யான குற்றச்சாட்டை நான் முன்வைத்திருப்பதாகவும், எனவே என்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்கள் என்மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

        ஈ.வெ.ரா அவர்களின்மீது என்னால் சாட்டப்பெற்ற குற்றச்சாட்டிற்கு நான் விளக்கம் தர கடமைப்பட்டிருக்கிறேன். வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே ஈ,வெ.ரா அவர்களைப்பற்றி அதாவது வைக்கம் போராட்டத்தைப் பற்றியும் மற்றும் பல போராட்டங்களைப் பற்றியும் நன் நன்கு அறிவேன். இந்த நாடே அறியும். ஆனால் அந்த வைக்கம் போராட்டத்தின் விளைவு என்ன? என்பதுதான் இங்கு நான் வைக்கும் குற்றச்சாட்டு.

நடுவர் : வைக்கம் போராட்டத்தின் விளைவு இந்த நாடே அறிந்த விஷயம்தானே? தாழ்த்தப்பட்ட தலித்துகள் கோயிலுக்குள் நுழைய இருந்த தடை விலக்கப்பட்டதே? இதில் என்ன குற்றம் இருக்கமுடியும்?

ஞானசூனியன் : மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே,  விளக்கமாக கூறுகிறேன்.. இன்று திருவாங்கூர் என்றழைக்கப்டும் வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாகிய தலித்துகள் கோவிலுக்குள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது. மேலும்  கோவில் இருக்கும் வீதியில் கூட தலித்துகள் நடக்கக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதற்காக போராட்டம் நடத்தியது, பார்ப்பனர்களின் கோயிலுக்குள் எனதுமக்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று போராடியது, அந்தப் போராட்டத்தில் தலித்துகளின் தன்மானத்தை, சுயமரியாதையை அடகு வைத்தது இவையெல்லாம் குற்றமில்லையா?
        இன்னும் விளக்கமாக கூறுகிறேன். சுயமரியாதை என்றால் என்ன? தன்னுடைய கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் அடுத்தவர்களிடம் தன்னிடம் இல்லாத ஒன்றை கேட்காமலிருப்பதும், அப்படி தன்னிடம் இல்லாததை தானே சுயமாக சம்பாதித்துக்கொல்வதுமே, சுயமரியாதை. ஈ.வெ.ரா. அவர்கள் தனது மக்களை பார்ப்பனர்கள் கோயிலுக்குள் அனுமதிக்காததற்கு அவர்களிடம் ஏன் போராடவேண்டும்? மாறாக தலித்துகளிடம் உங்களுகென்று ஒரு கோயிலை கட்டிக்கொள்ளுங்கள், அந்த கோயிலுக்கு நீங்களே பூசாரியாக இருக்கலாம், விருப்பப்பட்டால் பார்பனர்கள் அங்கு வரட்டும், நீங்கள் தடுக்காதீர்கள், கடவுள்முன் அனைவரும் சமமே எனவே நீங்கள் உங்கள் தன்மானத்தை விட்டு பார்பனர்களிடம் அனுமதி வேண்டி போராடுவதை விட்டுவிட்டு உங்களுக்கென்று ஒரு கோயிலை கட்டிக்கொள்ளுங்கள். அது சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, இறைவன் கோபித்துக்கொள்ளமாட்டார், ஏனென்றால் உங்கள் உள்ளம் பார்ப்பனக் கோயில்களைவிடப் பெரியது, மேலும் கோயிலுக்குள் நுழைய பார்ப்பனன் அனுமதித்தாலும் கடவுளை பார்க்கத்தான் முடியுமே தவிர, அவருக்கு நீ பூசை செய்யமுடியாது. (இன்றளவிலும் அதுதான் நடைமுறை.) ஆனால் உங்களுகென்று நீங்கள் கட்டிக்கொள்ளும் கோயிலில் நீங்களே பூசாரியாக இருக்கலாம். “எலி வலையானாலும் தனிவலைசிங்கத்திற்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருப்பதே சுயமரியாதை, தன்மானம் என்று கூறி தலித்துகளின் தன்மானத்தை வலுப்படுத்தியிருக்கவேண்டும் மாறாக பார்ப்பனர்களிடம் தலித்துகளின் தன்மானத்தை அடகு வைத்து விட்டு, தலித்துகளையும் கோயிலுக்குள் அனுமதிக்கவேண்டும், என்று போராடியது குற்றமே. இந்த அடிப்படையில் ஈ.வெ.ரா குற்றவாளியா? இல்லையா?

நடுவர் : வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே, வழக்கறிஞர் ஞானசூனியன் மிகக்கடுமையான குற்றச்சாட்டை திரு ஈ.வெ.ரா அவ்ர்களிமீது சுமத்தியுள்ளார், எங்களைப் பொருத்தவரையில் இவர் குற்றச்சாட்டில் நியாயம் இருபதாகத் தோன்றுகிறது, இது குறித்து நீங்கள் மேலும் ஏதாவது கருத்தோ, மறுப்போ தெரிவிக்க விரும்புகிறீரா?

ஆளவந்தான் : கணம் நீதிபதி அவர்களே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

நடுவர் : வழக்கறிஞர்கள் ஞானசூனியனின் மற்றும் ஆளவந்தான் ஆகிய இருவரின் கருத்துக்களையும் இம்மன்றம் பதிவு செய்துகொண்டுள்ளது

இம்மன்றம் நாளை ஒத்திவைக்கப்படுகிறது.

Tuesday 4 September 2012

பெரியாரிசம் ....... (பதிவு 9)

திருக்குறளில்....பெண்ணீயம்...

அதிகாரம் 6.

குறள் 1)

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இதன் பொருள்: இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள் கணவனின் வாழ்வுக்குப் பெருந்துனையாவாள் – டாக்டர் கலைஞர்

குறள் 2)

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

இதன் பெருள்: நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும், அதற்க்கு தனிச் சிறப்பு கிடையாது. – டாக்டர் கலைஞர்

குறள் 3)

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

நல்லப் பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது. – டாக்டர் கலைஞர்.

குறள் 4)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

இதன் பொருள்:

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பை பெற்றுவிட்டால் அதைவிட பெருமைக்குரியது வேறு யாது?
- டாகடர் கலைஞர்

குறள் 5)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இதன் பெருள்:

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்கொள்பவளாவாள்.
-டாக்டர் கலைஞர்.

இதற்க்கு என்னுடைய தகப்பனார் (முதுகலை தமிழாசிரியர்) தந்த விளக்கம் என்னவென்றால்...

தெய்வத்தை மதிக்கிறாளோ இல்லையோ, கணவனை மதித்து, அவன்மீது என்றும் மாறாத அன்புகொண்டு வாழும் பெண்....பல ஆண்டுகளாக மழையில்லாமல் வாடும் காலத்தில் மழை பெய்தால் எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ, அந்த மகிழ்ச்சிக்கு ஒப்பானவள்.

குறள் 6)

தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்.

கற்பு நெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்கு பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவளே பெண்.
- டாக்டர் கலைஞர்

குறள் 7)

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

இதன் பொருள்:

பெண்களை அடக்கி கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாக்கின்ற புறக்காவலால் எந்த பயனும் இல்லை. தனக்குத்தானே சுயகட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு நேர்மை தவறாமல் தன்னைத்தானே காத்துக் கொள்வதே பெண்மையின் சிறப்பு.
- என் தகப்பனார்.

குறள் 8)

பெற்றாள் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

இதன் பொருள்:

தான்பெற்ற துணைவனை பேணிப் பாதுகாக்கும் பெண்டிர் புகழுலகை அடைகின்ற பெருமை படைத்தவர்களாவர்.

குறள் 9)

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

புகழுக்குரிய குணநலன்களை உடைய மனைவியை அடையாதவர்க்கு, தம்மை பழித்துப் பேசுவோர் முன் தலை நிமர்ந்து நடக்கமுடியாமல் குன்றிப் போய்விடுவார்கள்.

புகழுக்குரிய குணநலன்களை உடைய மனைவியை அடைந்தவன், யாருக்கும் எப்பொழுதும் தலைகுனியாமல் சிங்கம் போல பீடுநடை போடுவான்.

குறள் 10)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

இல்வாழ்விற்கு சிறப்பாவது மனைவியின் சிறப்பு மிக்க குணங்களே.இதற்கு மேலும் சிறப்பு நல்ல குழந்தைகளை பெறுவதே.

மேற்கண்ட 10 குறள்களிலும் வள்ளுவப்பெருந்தகை எந்த ஓரு இடத்திலும் பெண்மையை சிறுமைபடுத்தவில்லை, அடிமை படுத்தவில்லை. மாறாக மொத்த சமுதாய முன்னேற்றமும் பெண்களின் கைகளில், ஒழுக்கத்தில்தான் உள்ளது. என்பதையே வலியுறுத்திக் கூறுகிறார்.

“எந்த ஓரு ஆணின வெற்றிக்குப் பின்னால் ஓரு பெண்தான் கண்டிப்பாக இருப்பாள்” இது அனுபவசாலிகளின் குறிப்பு.

பெண்களை ஒழுக்கத்துடன் இருங்கள் என்று வள்ளுவப் பெருதகை சொல்லுவது தவறா?

“*”`கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது என்பதை பெரியார் மட்டுமே உணர்ந்தார். `கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்பட வில்லை என கேட்டார். `கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண்மக்களை உலகம் முன்னேற்ற மடையச் செய்ய முடியாது என்றார்.”*” என்று திரு துரை.சந்திரசேகரன் அவர்கள், ஈரோடு. வே. ராமசாமி அவர்கள் கூறியதாக எடுத்துரைக்கிறார்.

ஆண்களுக்கு “கற்புநெறி” கற்பிக்கப்படவில்லை என்பதால் பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளிவரவேண்டும் என்று “பகுத்தறிவுப் பகலவன்”(?) கூறியது சரியா?

ஆண்களுக்கு “கற்புநெறி” கற்பிக்கப்படவில்லை என்பதால் பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளிவரவேண்டும் என்று கூறுவது எப்படியிருக்கிறது? என்றால், ஆண்கள் தவறு செய்கிறார்கள் எனவே பெண்களே நீங்களும் தவறு செயுங்கள் என்று கூறுவதாக இருக்கிறது.

“பகுத்தறிவுப் பகலவன்”(?)-னின் வழிகாட்டுதலின்படி தங்கள் குடும்பப் பெண்மணிகளை அனுமதிப்பார்களா? (இந்த வரியை எழுதியததற்க்காக பகுத்தறிவாளர்களின் வீட்டுப் பெண்மணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தவரியை எழுதத் தூண்டியவர்களே பகுத்தறிவாளர்கள்(?)தான்)

இதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்றால் இப்படிப்பட்ட பகுத்தறிவு எங்களுக்குத் தேவை இல்லை..
தேவை இல்லை..தேவையே இல்லை...

இவர்களை எல்லாம் ஆயிரமல்ல, லட்சம் விவேகானந்தர்கள் வந்தாலும் திருத்தமுடியாது.. திருத்த்த்தவ்வ்வ்வே முடியாது


என்கருத்து  : ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் , சுயகட்டுப்பாட்டுடன் இருந்தாலே நாடு வெகு சீக்கிரம் நன்மை அடையும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை...

மீண்டும் அடுத்த பதிவில் இன்னும் பார்ப்போம்.

பெரியாரிசம் ........(பதிவு 8)

எது பகுத்தறிவு...?...?...?

பெண் விடுதலை என்றபெயரில் பெண்மையை இழிவு படுத்துவதா?

நான் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்தவன், என்று தற்பெருமை பீற்றிக்கொள்வதா?


தான்தான் அறிவாளி, மற்றவர்களெல்லாம் முட்டாள் என்று கத்திக் கொண்டிருப்பதா?

கடவுள் இல்லை என்று பிதற்றுவதா?

ஜோதிடம் பொய் என்று வாதம் செய்வதா?

இந்துமதம் எங்கே போகிறது? என்று ஏளனம் செய்வதா?

பார்ப்பனீயத்தை மட்டும் இழிவு படுத்துவதா?

புராணங்களும், இதிகாசங்களும் மக்களுக்குப் பயனற்றவை என்று இழித்துப் பேசுவதா?

பேசுவதற்கு வாய் இருக்கிறது, கையில் மைக் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதா?

எழுதுவதற்கு பேனாவும், பேப்பரும் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் மனம் போனபோக்கில் எழுதுவதா?

எது சார் பகுத்தறிவு?

பெண்மை என்றால் என்ன? பெண் சுதந்திரம் என்றால் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

மனிதர்களில் இரண்டு பிரிவுகள் மட்டுமே உண்டு. ஒன்று ஆண், மற்றொன்று பெண். இதில் உடல்ரீதியாக, ஆணுக்கு இல்லாத இரண்டு சிறப்பம்சங்கள் பெண்ணுக்கு உண்டு.

1. குழந்தை உருவாகும் கருவறை.

2. அந்தக் குழந்தைக்கு அமுதூட்டும் அமுத சுரபி.

இந்த இரண்டு சிறப்பம்சங்களும் ஆணுக்கு இல்லை,

இதைத் தவிர மூன்றாவதாக ஓரு சிறப்பம்சம் உன்டு. அது
நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்களில் பூமியை மட்டும் பெண்ணாக உருவப் படுத்தினார்கள். நெருப்பு, காற்று, நீர் இமூன்றையும் ஆணாக உருவப் படுத்தினார்கள் ஆகாயத்தை மட்டும்.....(பிறகு பார்ப்போம்) நெருப்பு கற்று நீர் இவை ஒன்றையன்று அழித்துக் கொள்ளும். ஆனால் பூமி எதையுமே அழிப்பதில்லை. நெருப்பு கற்று நீர் இவை மூன்று தம் கடமையை செய்ய பூமி என்ற தளம் மிக முக்கியமானது. பெண்ணின் துணை இல்லாமல் ஆணால் எதையும் சாதிக்க முடியாது.

ஆறுகளை பெண்ணாக உருவகப் படுத்தி பெண் பெயரை சூட்டியிருப்பதன் நோக்கம் என்ன? தெரியுமா?

ஆறுகள் இரு கரைகளுக்கு நடுவே கட்டுப்பாட்டுடன் ஒடும்வரை பூமி செழிப்பாக இருக்கும். வெள்ளப் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடும்போது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.

அதுபோல பெண்கள் தன் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் எல்லாவிதத்திலும் நன்மை. மாறாக தறிகெட்டு ஆடினால் ஏற்படும் அழிவு மிகக் கொடுமையாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் நிறைய பெண்கள் “பெண் சுதந்திரம்” என்ற பெயரில் இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்கவும்.

தான் கொண்ட லட்சியத்தில் உறுதி கொண்டிருக்கும் பெண்களில் கூட பலபேர் அந்தப் பெண்களால் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஓரு பெண்ணைப் பற்றி அவதூறு கிளப்புவது யார் தெரியுமா...நட்பே?

பெண்கள்தான் என்பதை உன்னால் மறுக்க முடியுமா?

மேலும் இயற்கையை “அன்னை” என்றுதான் அழைக்கிறோம். ஏன்? தெரியுமா? இயற்கை அமைதியாக இருந்தால் உலகமே அமைதியாக இருக்கும். சீறினால் பேரழிவை ஏற்படுத்தும்.

அதுபோலதான் பெண்மையும் அமைதியாக இருக்கும் வரை நன்மை. அவர்கள் ஆட்டம் போட்டால் அவ்வளவுதான்...

நான் இங்கு பெண்களை அமைதியாகத்தான் இருக்கச் சொல்கிறேன். கொத்தடிமையாக இருக்கச் சொல்லவில்லை.

பெண் சுதந்திரம் வேண்டும், என்று கேட்கிறார்களே!!!

பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடிய அளவுக்கு யாருக்கு அதிகாரம் அல்லது யோக்கியதை இருக்கிறது?

யாரும் யாருக்கும் சுதந்திரம் கொடுக்க முடியாது. அவரவர் சுதந்திரம் அவரவர்களிடமே இருக்கிறது. தன் சுதந்திரத்தை (தனிமனித சுதந்திரத்தை) தவறாகப் பயன்படுத்துபவர்கள் (ஆணோ அல்லது பெண்ணோ) சீரழிந்துபோகிறார்கள். தனிமனிதக் கட்டுப்பாட்டுடன் தனிமனித ஒழுக்கத்துடன் சரியாகவும், நேர்மையாகவும் தன் சுதந்திரத்தை பயன் படுத்துபவர்கள் தானும் சாதித்து தன் துணையையும் சாதிக்க வைக்கிறார்கள்.

உலகப் பொதுமறை என்றும் பொய்யாமொழி என்றும் தமிழ் மறை என்றும் என்றும் உலகத்தோர் அனைவராலும் போற்றிப் புகழப்படும்

திருக்குறளில்....பெண்ணீயம்... அடுத்த பதிவில்

Friday 31 August 2012

பெரியாரிசம் ....... (பதிவு 7)



கடந்த பதிவுகளில் புராணங்களில் உள்ள வாழ்வியல் கோட்பாடுகளுக்கு சில உதாரணங்களை பார்த்தோம்.

இதிகாசங்களில் உள்ள இன்றைய அறிவியலுக்கு சமமான அல்லது மேம்பட்ட சில அறிவியல் உதாரணங்களை பார்ப்போம்.

மகாபாரதத்தில் பாண்டு மகாராஜாவின் மனைவிக்கு கர்ணன், தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்று ஆறு மகன்கள். இவர்கள் ஆறுபேருக்கும் தந்தை பாண்டு மகாராஜா அல்ல.

கர்ணனுக்கு சூரியனும், தருமனுக்கு எமதர்மராஜனும், பீமனுக்கு வாயுபகவானும், அர்ஜுனனுக்கு இந்திரனும், நகுலன் மற்றும் சகாதேவனுக்கு அசுவனி தேவர்களும் தந்தை ஆவார்கள்.

எனவே குந்தி தேவி பத்தினி அல்ல, தன்கணவனை விடுத்து பிற ஆடவர்களோடு கூடி ஆறு மகன்களை பெற்ற குந்தி தேவியை எப்படி பத்தினி என்று ஏற்றுக்கொள்ள முடியும்? என்பது நம் பகுத்தறிவு ஜீவிகளின் ஆராய்ச்சிக் கேள்வி.

இவர்களின் ஆராய்ச்சியும் கேள்வியும் இந்த அளவில்தான் இருக்கும்.

காரணம் இவர்கள் பகுத்தறிவு என்ற இரும்புத்திரைக்கு பின்னால் மறைந்து கொண்டு மறுபுறம் ஒன்றுமே இல்லை என்று சாதிப்பவர்கள். மறுபுறம் ஏதாவது இருக்கலாம் என்ற குறைந்தபட்ச சந்தேகம் அல்லது யூகம் கூட இல்லாதவர்கள்.

இன்றைய காலகட்டத்தில் வாரிசு இலாத தம்பதியினர் “டெஸ்ட் ட்யூப்” முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்களே, இந்த அடிப்படையில் அந்தப் பெண்ணை நெறிதவறியவள் என்று கூறிவிடமுடியுமா? கேட்டால் விஞ்ஞானம், அறிவியல் என்றெல்லாம் கூறுவார்கள்.

இதே விஞ்ஞானம் மகாபாரத காலத்திலேயே இருந்தது. என்பதை ஏன் இந்த பகுத்தறிவு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவர் ஒரு விஞ்ஞானி அல்ல, அவர் ஒரு முனிவர் என்பதினால்தானே?

சில ஆண்டுகளுக்கு முன்பு சித்த வைத்தியத்தை மருத்துவம் என்று ஏற்றுக்கொள்ளாத இந்த சமூகம் இன்று அதற்கென்று ஒரு பட்டப் படிப்பையும் ஏற்படுத்திஇருக்கிறது.

சித்த வைத்தியக் குறிப்புகளை எழுதி வைத்தவர்கள் சித்தர்கள் என்ற முனிவர்கள்தானே?

முனிவர்கள் எழுதிய ஒவ்வொரு விஷயமும் வாழ்வியல் கோட்பாடு, அல்லது விஞ்ஞான கோட்பாடு இந்த இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும். இங்கு சித்தர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் விஷயம் எங்கோ சென்றுவிடும்..

இப்படி அறிவியல் மற்றும் வாழ்வியல் சம்மந்தமான விஷயங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் உள்ளன, என்பதால் இவற்றை அழிய அனுமதிக்கக்கூடாது.

பெரியாரிசத்தின் ஒரு பகுதியாகிய “சாதி ஒழிப்பு கொள்கை” என்பது வரவேற்க்கத்தக்கது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை,இருக்கவும் கூடாது. ஆனால் இதற்க்கு பெரியார் கண்டதீர்வுதான் கடவுள் மறுப்புக் கொள்கைதான் சரியில்லை என்பது என்கருத்து.

இந்த கடவுள் மறுப்புக்கொள்கையை வைத்து எழுதினால் நிறைய, நிறைய, நிறைய, எழுதலாம். ஆனால்.....

அடுத்து பெரியாரிசத்தின் மற்றொரு பகுதியாகிய “பெண் விடுதலை”யை ப்பற்றி வரும்பதிவுகளில் .........

Wednesday 29 August 2012

பெரியாரிசம்........ (பதிவு 6)


பெரியாரிசம் (பதிவு 6)

சென்ற பதிவில் திருவிளையாடற்புராணத்தில் ஒருசிறிய கதையை கூறி அதில் வாழ்வியல் கோட்பாடு ஒன்று உள்ளது சிந்தித்து வையுங்கள் என்று கூறியிருந்தேன்..

என்னவென்று நீங்களும் சிந்தித்து வைத்திருப்பீர்கள்..

அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம், தாய்தந்தையே நமது உலகம், என்ற வாழ்வியல் கோட்பாடு உள்ளதலவா? இந்த கருத்தை வலியுறுத்த படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் கற்பனயானதா? நிஜமானதா? என்று மட்டும் சிந்திப்பது பகுத்தறிவல்ல....
அந்தக் கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு கிடைக்கும் செய்தி என்ன? என்று சிந்திப்பதே பகுத்தறிவு.

இப்பொழுது ஐயப்பன் தொடர்பாக, இந்தப் பகுத்தறிவாளர்களின் கருத்து....

சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் அதாவது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன். எப்படி ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கும்? எனவே கடவுள் சம்ந்தப்பட்ட கதைகள் கற்பனை மட்டுமல நம்மை முட்டாளாக்கும் பொய்யான கதைகள்.

இவர்களின் பகுத்தறிவு இந்த அளவுக்குத்தான் வேலை செய்யும்...

ஆனால் ஐயப்பனின் பிறப்பில் ஒரு வாழ்வியல் கோட்பாடு உள்ளதே அதைப் பற்றி ஏன் இந்த பகுத்தறிவு சிந்திக்கவே இல்லை?

ஐயப்பனின் பிறப்பில் என்ன சார் வாழ்வியல் கோட்பாடு உள்ளது?

மகிஷி என்ற அரக்கியை அளிப்பதற்காக ஐயப்பன் அவதரித்தார். அதாவது மகிஷி என்ற அதர்மத்தை, மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவால் ஆசீர்வதிக்கப்பட்ட மகிஷி என்ற அதர்மத்தை அழிக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் (ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கும் என்று யாரும் எதிர்பார்க்காத வகையில்) ஐயப்பன் என்ற  தர்மம் பிறந்தது, அதர்மத்தை அழித்தது.

அதாவது நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற அளவுக்கு ஒருவ(ளி)னிடம் அதிகாரம் இருக்கும் பொழுது  அவன்(ள்) அதர்மங்களை செயும்போது தர்மம் எந்த ரூபத்திலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் தோன்றி அவனை(ளை) அழிக்கும்.

எனவே மனிதர்களாகிய நாம் எந்த சூழ்நிலையிலும் அதர்மத்தை கடைபிடிக்கக் கூடாது. அதையும் மீறி அதர்மத்தை ஒருவன்(ள்) கடைபிடித்தால் அவனை(ளை) தர்மம் அழிக்கும்.......... என்ற வாழ்வியல் கோட்பாடு, எவ்வளவு அருமையான கோட்பாடு.

இதயெல்லாம் சிந்திக்காமல் "கடவுள் மறுப்புக் கொள்கை" என்ற முட்டாள்தனமான கொள்கையை கடைபிடிப்பதுதான் பகுத்தறிவா?

பகுத்தறிவே கொஞ்சம் சிந்திக்கவும்....

மீண்டும் அடுத்த பதிவில்..

Monday 27 August 2012

பெரியாரிசம்......... (பதிவு 5)



பெரியாரிசம் (பதிவு 5)

பெரியாரிசத்தின் கடவுள் மறுப்புக்கொள்கையின் இன்னொரு வெளிப்பாடு.. புராணங்களும், இதிகாசங்களும் பொய்யும், புனைசுருட்டும் கலந்தவைகள். இவைகள் மனிதர்களின் அறிவை மழுங்கடிக்கின்றன.

இந்த கருத்து மிகவும் அபத்தமானது, முட்டாள் தனமானது.

இதற்க்கு உதாரணமாக ஒரு புராணக் கதை ஒன்றை சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன்.

ஒருமுறை நாரதர் ஒரு பழத்தைக் கொண்டு வந்து, "இது யாருக்குமே கிடைக்காத ஞானப்ப


ழம், இதை நான் உண்பதை விட தாங்கள் உண்பது தான் சிறந்தது" என்று கூறி சிவபெருமானிடம் கொடுத்தார்.

சிவபெருமான், பார்வதி தேவியைப் பார்த்து "உமையவளே நீ என்னை இயக்கும் சக்தியாக, என்னில் சரிபாதியாக இருக்கிறாய், நம்மை அனைவரும் 'அம்மை அப்பன்' என்றுதான் அதாவது அம்மை என்று உன்னைத்தான் முதலில் நிறுத்தி அழைக்கிறார்கள். எனவே இந்தப் பழத்தை நான் உண்பதைவிட நீ உண்பதே மிகவும் சிறப்பு" என்று கூறி அம்மையிடம் தந்தார்.

அதற்க்கு அம்மையும்" நாம் அம்மை அப்பன் ஆகிவிட்டோம். இனி வருங்காலம் நம் பிள்ளைகளின் கையில் உள்ளது. எனவே இதை பிளைகளுக்கே தந்துவிடலாம்" என்று கூறுகிறாள்.

விநாயகன், முருகன் இருவரில் யாருக்குத் தருவது என்பதில் குழப்பம் வந்தபொழுது, சிவபெருமான் இருவரில் யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிராகளோ அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம்.
என்று கூறிவிட்டார்.

உடனே முருகனும் உலகை சுற்ற புறப்பட்டான், ஆனால் விநாயகனோ நாரதரைப் பார்த்து "நாரதரே, உலகம் என்றால் என்ன? அம்மையப்பன் என்றால் என்ன?" என்று கேட்டான்? நாரதரும் மற்றவர்களும்
விநாயகனின் கருத்தை ஆமோதித்தனர்.

விநாயகனும் அம்மை அப்பனை சுற்றிவந்து பழத்தைப் பெற்றுக்கொண்டான்.

இந்தக் கதையை இத்துடன் முடித்துக்கொள்ளலாம்.

இந்தக்கதையை ஏன் இவ்வளவு விரிவாக தந்தேன்? என்றால் இதில் மிக முக்கியமான வாழ்வியல் கோட்பாடு உள்ளது.

என்னவென்று யோசித்து வையுங்கள்.

மீண்டும் அடுத்தப் பதிவில் ....

Saturday 25 August 2012

பெரியாரிசம் .... (பதிவு 4 )


பெரியாரிசம் (பதிவு 4)

இவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கையினால் இன்னொரு இழப்பு என்ன?

சமஸ்கிருதம் என்ற ஒரு மொழியை இன்று இழந்து நிற்கிறோம். காரணம் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி வழிபட்டால்தான், வழிபாடு கடவுளைச் சேரும். என்ற பார்ப்பனீயக் கொள்கை தான். நானும் கூட இதை மறுக்கிறேன். கடவுளை வழிபட சமஸ்கிருதம் தான் ஏற்ற மொழி என்பதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் எந்த ஆலையத்திலும் அர்ச்சனை செய்வதில்லை. இறை வழிபாட்டிற்கு மொழி ஏதும் தேவையில்லை. என்பதே சிறந்த கோட்பாடு. சமஸ்கிருதம் உனக்கு பிடிக்கவில்லையா? விட்டுவிடு, உனக்கு பிடித்த மொழியை வைத்து வழிபடு.

இவர்களால் இன்று சமஸ்கிருதம் மொழியில் இருந்த பல அறிய பொக்கிஷங்கள் அழிந்துவிட்டனவே? இவர்களால் அவற்றை மீட்டுத் தரமுடியுமா? எவ்வளவு அறிவியல் விஷயங்கள் சம்ஸ்கிருத நூல்களில் இருந்தது, கடவுள் மறுப்பு என்ற ஒன்றுமற்ற கொள்கையினால் ஒரு மொழியையும் அதில் உள்ள பல அறிய தகவல்களும் இன்று காணாமல் போய்விட்டதே!!

சமஸ்கிருதம் என்பது ஆரியர்களின் (பார்ப்பன) மொழி, எனவே அதை ஒழிக்கவேண்டும் என்ற மூடத்தனமான கொள்கையினால் இன்று அந்த மொழி செத்துவிட்டதே!! உன்னால் அதை மீண்டும் உயிர்ப்பித்து தர முடியுமா?

எந்த ஒரு விஷயமும் 100% தூய்மையானதும் இல்லை, 100% தீமையானதும் இல்லை. நண்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கும். நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தீயவைகளை எப்படி நன்மையாக மாற்றவேண்டும் என்பதை யோசிக்கவேண்டும். நான் முன்பே சொன்னதை இங்கு மீண்டு குறிப்பிட விரும்புகிறேன். மிகப்பெரிய அழிவு சக்தியாகிய அணுசக்தியை மின்சாரம் தயாரிக்கவும், பாம்பின் விஷத்தைக் கொண்டு மருந்து கண்டுபிடித்தது போல.

பார்ப்பனீயத்தையும், சமஸ்கிருதத்தையும் அப்படித்தான் அணுகியிருக்க வேண்டும், பார்ப்பனீயத்தை ஒழிப்பதைவிட திருத்தி அமைக்க வேண்டும் என்பதே சரியான கொள்கையாக கொள்கையாக இருக்கும்.

தனக்குப் பிடிக்காத, அல்லது தனக்குத்தெரியாத எதையும் ஒழிக்கவேண்டும் என்பதல்ல உண்மையான பகுத்தறிவு.

தனக்கு பிடிக்காதது மற்றவர்களுக்கு பிடிக்க்க்கூடும் அல்லது பயன்படக்கூடும் எனவே அதை பாதுகாக்கவேண்டும், அல்லது குறைந்தபட்சம் அழிக்கும் முயற்சியையாவது கைவிடவேண்டும்.
அதேபோல தனக்கு தெரியாத விஷயத்தை தெரியாது என்று ஒப்புக்கொண்டு, அதை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து தெளிய வேண்டும். இதுதான் உண்மையான அல்லது சரியான பகுத்தறிவு.


இன்னும் வளரும் ....

பெரியாரிசம் .....(பதிவு 3)


பெரியாரிசம் (பதிவு 3)

மீண்டும் பார்ப்பணர் விஷயத்திற்கு வருவோம். கடவுளை வைத்து பார்ப்பணன் பிழைப்பு நடத்துகிறான். அல்லது பிழைப்பு நடத்துவதற்கு கடவுளை பயன்படுத்திக்கொண்டான். கடவுளிடம் பார்ப்பனரல்லாதவர்களை அனுமதிக்க மறுக்கிறான். அதனால் கடவுளை எதிர்க்கிறோம் என்று வைத்துக்கொண்டால்...

இந்த பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த இவர்கள் ஆட்சி காலத்தில் அரசியலை வைத்து கோடிக்கணக்கில் லஞ்ச லாவண்யங்களை வளர்த்து விட்டிருக்கிரார்களே. கோடிகோடியாக பணம் செலவு செய்பவர்களும், கோடிகோடியாக கட்சிக்கு நிதி தருபவர்களும் மட்டுமே அரசியலில் ஈடுபட முடியும், மற்ற சாமானிய திறமைசாலிகள் எவரும் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்ற நிலைக்கு காரணமான இவர்களின் அரசியலை எங்கு கொண்டு புதைப்பது? ;லட்சலட்சமாக கொட்டிக் கொடுத்தால்தான் வேலை. பணம் இல்லாவிட்டால் வேலை இல்லை என்ற அவல நிலைக்கு தள்ளிய இவர்களின் அரசியலை எங்கு கொண்டு எரிப்பது? பத்தாயிரம் இருபதாயிரம் என்று கொடுத்தால்தான் அடிப்படை கல்வியே கிடைக்கும் என்ற கேடுகெட்ட இந்த நிலைக்கு காரணமான அரசியலை புதைபதா? எரிப்பதா?

அரசியலை புதைப்பதிலோ, எரிப்பதிலோ எந்தவிதமான லாபமும் இல்லை, மாறாக தீமையே விளையும். அரசியலை அழிப்பதைவிட அரசியல் வாதிகள் திருந்த வேண்டும் என்பத்தானே சிறந்த வழி. அதேபோல கடவுளை மறுப்பதைவிட பார்ப்பனர்களை த்திருத்துவதுதான் சரியான வழி. கடவுளை மற மனிதனை நினை என்று கோஷமிடுவதைவிட, பார்ப்பனனும் திராவிடனைப்போல மனிதன்தானே என்பது பற்றி சிந்திக்குமா? இந்த பகுத்தறிவு, பார்ப்பனன் ஒழிவதைவிட பார்பனீயம் ஒழிய வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும்.

பெரியார் தன் கடவுள் மறுப்புக் கொள்கையை தன் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தி இருந்தாரா? அவருடைய குடும்பத்தில் மனைவி, உடன்பிறந்தோர், உற்றார், உறவினர்களிடம் தன் கடவுள் மறுப்புக் கொள்கையை அறிவுறுத்தினாரா? பெரியாரின் தொண்டர்களாகிய இன்றைய பகுத்தறிவு ஜீவிகள் தங்கள் குடும்பத்தாரிடம் பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கையை அறிவுறுத்தினர்களா?

இதற்கு பகுத்தறிவு ஜீவிகளின் பதில் என்ன, தெரியுமா? அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம், அதில் நாங்கள் தலையிடுவதில்லை, என்பார்கள்.

மக்கள் என்ன இளிச்சவாயர்களா? மக்களின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? இவர்களுடைய பெண்டு பிள்ளைகள், குடும்பத்தார், உற்றார் உறவினர் இவர்களெல்லாம் சுதந்திரமாக கடவுளை ஏற்றுக் கொள்ளலாம். தங்களுடைய குடும்பத்தார் மட்டும் சுயமரியாதையுடன் இருக்கலாம். மற்றவர்கள் சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் தலையிடுவதற்கு இவர்கள் யார்?

கடவுளை நம்புகிறவன் முட்டாள், என்று எங்களையும், கடவுளை கற்ப்பித்தவன் காட்டுமிராண்டி என்று எங்கள் சான்றோர்களையும் சாடுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

அடுத்தப் பதிவில் இன்னும் வரும்....

பெரியாரிசம் ......(பதிவு 2)


பெரியாரிசம் (பதிவு 2)

கடவுளை கற்பித்தவர்கள் ஆரியர்களாகிய பார்பனர்கள் என்ற காரணத்தை முன்வைத்து, பார்பனர்கள் கற்பித்த கடவுளை மறுக்கிறார்.

ஏன் திராவிடன் உருவ வழிபாடு செய்யவில்லையா? சூரியனையும், பசுவையும், சிவனையும், பாம்பையும், இயற்கையையும் வணங்கியதாக திராவிட வரலாறு கூறுகிறதே.

சரி, பார்ப்பனரே கடவுளை கற்பித்தனர் என்றே வைத்துக்கொள்வோம்,

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
இதன் பொருள் : எந்த ஒரு பொருளையும் (பருப்பொருள், கருப்பொருள்) அது எந்த தன்மையுடையதாக இருந்தாலும் சரி அதனுடைய உண்மைத்தன்மை, ஆழம், உள்ளார்ந்தக் கருத்து, போன்ற பல பரிமாணங்களில் ஆய்வு செய்வதே (பகுத்தறிவு) அறிவு.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
இதன் பெருள் : எந்த ஒரு பொருளைப்பற்றியும் ஏதாவது தகவல்கள் இருக்கும். அந்த தகவல் யாரால் சொல்லப்பட்டது, சொன்னவர் படித்தவரா?, படிக்காதவரா? ஏழையா? பணக்காரனா? ஆட்சி அதிகாரத்தில் உள்ளவரா? சாதாரண குடிமகனா? முடவனா? ஆன்மீகவாதியா? பகுத்தறிவு வாதியா? விஞ்ஞானியா, ஆரியனா? (பார்ப்பனனா?), திராவிடனா? என்பதையெல்லாம் விடுத்து சொல்லப்பட்ட செய்தி அல்லது தகவலின் உண்மைத்தன்மை, ஆழம், உள்ளார்ந்த கருத்து, போன்ற பல பரிமாணங்களில் ஆய்வு செய்வதே (பகுத்தறிவு) அறிவு.

“குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்
இதன் பொருள் : மேற்படி இரண்டு குறள்களின் படி ஆய்வு செய்தால் கிடைக்கும் வெளிப்பாடுகளில் நன்மைதீமைகளை ஆராய்ந்து நன்மைகளை எடுத்துக்கொண்டு, (முடிந்தால்) தீமைகளை நன்மைகளாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு செய் (பாம்பின் விஷத்திலிருந்து மருந்து கண்டு பிடித்ததுபோல, அளவிட முடியாத அழிவு சக்தியாகிய அணு சக்தியை பயன் படுத்தி ஆக்க சக்தியான மின்சாரம் தயாரிக்கப் படுவது போல)

கடவுள் என்ற ஒரு கருப்பொருளை அல்லது உருப்பொருளை கற்ப்பித்தது யார் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. அதனால் ஏற்படும் நண்மை என்ன? தீமை என்ன?

ஒரு சிறு செய்தியை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன், பள்ளியில் ஆசிரியர் அடிப்பார் அல்லது திட்டுவார் என்ற பயம் இருந்தால்தானே நம் பிள்ளைகள் வீட்டுப்பாடங்களை ஒழுங்காக செய்வார்கள். அம்மா அப்பா வருந்துவார்கள் என்ற பயம் இருந்தால்தானே நம் பிள்ளைகள் ஒழுக்கம் தவற மாட்டார்கள். பிள்ளைகளிடம் மேற்படி பயம் இல்லை என்றால் நிச்சயம் பிள்ளைகள் தடம் மாறுவது உறுதிதானே.

“குலம் உயர்த்தி தாழ்த்தி சொல்லல் பாவம்என்ற வரியில் பாவம் என்ற சொல்லை பாரதியார் பயன் படுத்தியிருக்கிறார். கரணம் பாவம் செய்தவர்களை கடவுள் தண்டிப்பார், என்ற பய உணர்வு இருந்தால்தான் பின்தங்கிய சாதிகளை தாழ்த்தி பேச மாட்டார்கள் என்ற எண்ணம்தான்.

தீமை செய்தால் பாவம் சேரும், பாவம் சேர்ந்தால் கடவுள் தண்டிப்பார் என்ற பயஉணர்வு இருந்தால் யாரும் தவறு செய்ய பயப்படுவார்கள். மேற்படி பயஉணர்வு இல்லாததால்தானே இன்று லஞ்சம, ஊழல் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்தோங்கி இருக்கிறது.

படிப்பறிவு இல்லாத காமராஜர் கல்விக்கே கண்கொடுத்தார். அதனால் இன்றளவிலும் பெருந்தலைவர் போற்றப்படுகிறார்.

ஆனால் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டதால் இன்றைய நிலை என்ன? பொதுஉடமையாகிய கல்வி இன்று தனியார் மயம் ஆகி வியாபாரப் பொருளாக, ஆடம்பரப் பொருளாக சீரழிந்து நிற்கிறதே.

இன்னும் வரும் அடுத்தப் பதிவில்......

பெரியாரிசம்....(பதிவு 1)



பெரியாரிசம் (பதிவு 1)

அன்பு நண்பர்களே பெரியாரிசத்தை விரிவாக அலசவேண்டும் என்று கருதினேன். எனவே இது மிக நீ......ண்ட பதிவாக அமைந்துவிட்டது. ஆகையால் பொறுமையுடன் (விருப்பப்பட்டால்) படித்து உங்களுக்கு தோன்றும் கருத்தை நீங்கள் விருப்பப்பட்டால் பின்னூட்டம் இடுங்கள்.

பெரியாரிசம் ; ஜாதிகள் ஒழிய வேண்டும், பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும், இதற்கு பெரியாரின் தீர்வு : ஜாதிகள் ஒழிய கடவுள் மறுப்புக் கொள்கையும், பெண் அடிமைத்தனம் ஒழிய ஆண்களைப்போல பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளியே வரவேண்டும், ஆகியவை பெரியாரிசத்தின் கொள்கையின் சாராம்சம்.

ஜாதிகள் ஒழிய கடவுள் மறுப்புக்கொள்கை : ஜாதிகள் ஒழிய வேண்டும் என்ற கொள்கையை பெரியார் அவர்கள்தான் முதலில் வலியுறுத்திக் கூறினார் என்று இன்றைய பகுத்தறிவு ஜீவிகள் பிதற்றிக்கொண்டிருக்கின்றனர்.

மகா கவி பாரதியா “சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் உயர்த்தி தாழ்த்தி சொல்லல் பாவம் என்று சொல்லியிருக்கிறானே?

சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெல்லாம்
பூதவாசல் ஒன்றலோ பூதம்ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளில் காரைகம்பி பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ? – என்று சாதி பாகுபாட்டையும்,

பறைசியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ? பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் ப்குத்துப்பாரும் உம்முள்ளே. – என்று தீண்டாமையையும் சிவவாக்கியர் என்ற சித்தர் சாடவில்லையா?

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி. – என்றுஔவையார் சாடவில்லையா?

இவர்கள் யாரும் சாதியை ஒழிக்க கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடிக்க வில்லையே...

மேற்படியாளர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடிக்காததால்தான் சாதி ஒழியவில்லை, அதனால்தான் பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்தார், என்று வைத்துக்கொண்டால் இப்பொழுது மட்டும் என்ன வாழுதாம்... தெருவுக்கு ஒரு சாதி, சாதிக்கு ஒரு கட்சி என்றல்லவா இருக்கிறது... கடவுளை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமா? சாதிக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்.

எந்த ஒரு நல்ல செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது மிக மிக மிக கடினம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றே? ஆனால் எதை சொல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த செய்தியை எப்படி சொல்ல வேண்டும் எங்கு சொல்ல வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதாவது சொல்ல வேண்டிய செய்தியை மற்றவர் மனது புண்படாதபடியும், எளிமையாகவும், சொல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு கடவுளுக்கு பாலபிஷேகம் செய்வதால் பல லிட்டர் பால் வீணாகிறது, அந்தப் பாலை பசியால் வாடும குழந்தைகளுக்கு தானமாகக் கொடுத்தால் கடவுள் மிகவும் மகிழ்வார், அபிஷேகம் செயப்படும்ம்பால் யாருக்கும் பயன்படாமல் வீணாவதை அந்த கடவுளே விரும்பமாட்டார் என்று சொன்னால் 100 பேரில் 20 பேராவது சிந்தித்திருப்பார்கள்.

அதை விடுத்து “கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை கற்பிப்பவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் கூறும்பொழுது “கடவுளை கற்பித்த சித்தர்களும், ஞானிகளும் காட்டு மிராண்டிகளா? என்ற ஒரு கேள்வி எழும. கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை கற்பிப்பவன் காட்டுமிராண்டிஎன்று சொன்னவர்மீது வெறுப்புதான் வரும்.

தொடரும் ....அடுத்த பதிவில்...

Thursday 9 August 2012

உனக்குள் இருக்கும் உன்னை....



கொலம்பஸ், ஆம் அமெரிக்காவை கண்டு பிடித்த அதே கொலம்பஸ்-ஐப் பற்றித்தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.




கொலம்பஸ் தான் அமெரிக்காவை கண்டுபிடித்தவர், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே! இன்னும் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?



உண்மைதான். இத

ுமட்டும்தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம், இந்த சாதனைக்குப் பின்னால் உள்ள வெற்றியின் ரகசியம் தெரியுமா உனக்கு? தெரிந்திருந்தால் மிக்க சந்தோஷமே.



தெரியாவிட்டால் உனக்கு மட்டும் சொல்கிறேன், கேட்டுக்கொள். யாரிடமும் சொல்லிவிடாதே. இது ரகசியம்.



கொலம்பஸ் சிறுவனாக இருந்தபொழுதே அவன் மனதில் ஒரு லட்சியம். ஆனால் அவன் தந்தையோ ஒரு ஏழை நெசவுத் தொழிலாளி. ஒரு சராசரி தகப்பன் என்ன செய்வாரோ அதைத்தான் அவரும் செய்தார். தன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக தன் மகனையும் தன்னுடன் நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தினார்.



ஆனால் நம் கொலம்பஸ்-ன் கைகளும் கால்களும் மட்டுமே நெசவு செய்தன. அவன் மனம் மட்டும் தன் லட்சியக் கனவுகளைத் திரும்பத்திரும்ப சிந்தித்துக் கொண்டிருந்தது.



\\ என்றாவது ஒருநாள் எதையாவது, எப்படியாவது நான் சாதித்துக் காட்டுவேன், அன்று இந்த உலகமே என்னை திரும்பிப் பார்க்கும் // என்று வெறும் வெட்டிப் பேச்சாக இல்லாமல் தான் சாதிக்கவேண்டியதை தீர்க்கமாக சிந்தித்ததோடல்லாமல், அதற்க்கான திட்டங்களையும் தீட்டி வைத்திருந்தான். அந்தத் திட்டம்தான் “இந்தியாவுக்குக் கடல்வழி ” என்பது.



இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்க வேண்டும், கடல் வழியாக இந்தியாவை அடையவேண்டும் என்ற அவரின் லட்சியத்தை பல செல்வந்தர்களிடம் கூறி கடல் வழி பயணிக்கத் தேவையான கப்பல், உணவு போன்ற வகையில் உதவி செய்யும்படி கேட்டான்.



அனைவரும் எள்ளி நகையாடினார்களே தவிர ஒருவரும் உதவி செய்ய முன்வரவில்லை.



இவனும் அசரவில்லை, தோல்வியில் துவண்டுவிடவில்லை. மேலும் பல அரசாங்கங்களை உதவி கேட்டு அணுகினான். ஆனால் யாருக்கும் இவன் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.



இப்படியே சுமார் பத்து ஆண்டு காலம் போராடிப் போராடி, தோற்றான். ஆனாலும் இவனின் லட்சிய வெறி அடங்கியபாடில்லை. அந்த லட்சியம் அவனின் ஆத்மாவோடு கலந்ததல்லவா.



மீண்டும் மீண்டும் போராடினான். கடைசியாக ஸ்பெயின நாட்டு அரசு அவன் மீது நம்பிக்கை வைத்து உதவி செய்ய முன்வந்தது. பயணத்திற்குத் தேவையான மூன்று கப்பல்கள், தேவையான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொடுத்தது. ஆனால் விதியோ அவனை ஓட ஓட விரட்டியது. இவன் ஒரு பைத்தியம் என்றெண்ணி கப்பலை ஓட்ட எந்த மாலுமியும் முன்வரவில்லை. தன் நம்பிக்கையை தளரவிடாமல், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக மரணதண்டனை பெற்ற குற்றவாளிகளை அனுப்பித் தரும்படி வேண்டினான். சுமார் 85 கைதிகளை அழைத்துப் போக அனுமதியும் கிடைத்தது.



இவனது லட்சியங்களையும், இவனையும், 85 கைதிகளையும் சுமந்துகொண்டு கப்பல் புறப்பட்டு பயணித்தது. இங்கு விதி மீண்டும் சதி செய்தது. இவன் செல்லவேண்டிய திசையோ கிழக்கு. கப்பல் பயணித்துக் கொண்டிருப்பதோ மேற்கு.



இவனுடைய அயராத முயற்சி, உழைப்பு இவற்றைக் கண்ட இயற்கை அன்னை விதியின் சதியை முறியடித்து இவனுக்கு வேறு ஒரு பரிசை தந்தாள். அதுதான் அமெரிக்கா.



சரியான லட்சியமும், உண்மையான உழைப்பும் கொண்டவர்களை விதி சதி செய்தாலும் இயற்கை அன்னை கைவிடுவதில்லை.



இளைய சமுதாயமே நீ ஒன்றும் கொலம்பஸ் ஆகவேண்டாம்.
உனக்குள் இருக்கும் உன்னை...
உனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையா(ளை)ளனை....
உனக்குள் இருக்கும் சாதனையா(ளை)ளனை....
உனக்குள் இருக்கும் கொலம்பஸ்-ஐ...
உடனே கண்டுபிடி
- please
வெற்றி உன் பாக்கெட்டில்

அறிவு..........

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னால் நிலாவுக்குப் போவது பற்றி யாராவது பேசியிருந்தாலோ,

உலகத்தில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் இன்டர்நெட் மூலம் ஒன்றாக இணைக்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தாலோ,


சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் நான் ஆகாய விமானம் ஒன்றை உருவாக்கப் போகிறேன், அதில் ஏறி ஆகாயத்தில் பயணம் செய்யலாம் என்று யாராவது பேசியிருந்தாலோ,


‘பாவம் இவனுக்கு புத்தி கெட்டுவிட்டது’ என்றோ, ‘இவன் முட்டாள்தனமாக ஏதோ உளறுகிறான்’ என்றோ, ஏளனம் பேசியிருப்பார்கள்.


ஆனால் இன்றோ செவ்வாய் கிரகத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு அறிவு வளர்ந்திருக்கு. இன்டர்நெட்டும் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு வளர்ந்திருக்கு.


இப்படி சில காலத்திற்கு முன் நம்பமுடியாத பல விஷயங்கள் இன்று விஞ்ஞானத்தின் விஸ்வரூபமாக வளர்ந்திருக்கிறது. சிலகாலத்திற்கு முன் நம்பமுடியாத பல விஷயங்கள், இன்று நமது அன்றாட அத்தியாவசிய தேவையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இதற்க்கு காரணம் என்ன என்று கேட்டால் “விஞ்ஞானத்தின் வளர்ச்சி” என்று பகுத்தறிவாளர்கள் கூறுவார்கள்.


உண்மை அதுவா?


அறிவின் வளர்ச்சி, என்பதுதானே சரியான பதில். (அறிவு பிரசவித்ததுதானே விஞ்ஞானம்.)


அறிவின் வளர்ச்சியை இன்னும் ஆழ்ந்து “சரியாக அல்லது முறையாக வளர்ந்திருக்கிறதா?” என்று யோசித்தால், இல்லை என்பதே எனது கருத்து.


காரணம், கம்ப்யூட்டர் கண்டுபிடித்த அதே அறிவுதான் “வைரஸ்”-ஐயும் கண்டுபிடித்தது


வைரஸ்-ஐக் கண்டுபிடித்த அதே அறிவுதான் ஆண்ட்டி வைரஸ்-ஐயும் கண்டுபிடித்தது.

இன்டர்நெட்டை கண்டுபிடித்த அதே அறிவுதான் அதில் “தகாத, மட்டரகமான விஷயங்களை” உலாவ விட்டது.

சட்டம் படித்த அதே அறிவுதான் சட்டத்தில் இருக்கிற ஓட்டைகளையும் கண்டுபிடிக்கிறது.

இப்படி எவ்வளவோ விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நல்லவிஷயங்களை கண்டுபிடித்ததும் அறிவுதான், தீய விஷயங்களை கண்டுபிடித்ததும் அறிவுதான்

ஆக, அறிவு நல்லது கெட்டது தெரியாமல், வளர்ந்திருக்கிறது.

அறிவு இப்படி ரெண்டுங்கெட்டான் வளர்ச்சி பெற்றதற்கு காரணம் என்ன?

சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால், அறிவும் மனமும் ஒன்றுபட்டு செயல்படாததே இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

என்ன நான் சொல்வது சரிதானே?

பூமியிலிருந்துகொண்டே ஒரு சிறிய இயந்திரத்தை ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு அனுப்பி அங்கிருக்கும் சூழ்நிலையை ஆராய்கிறது, இப்படி எவ்வளவோ சாதித்திருக்கிறது இந்த அறிவு, ஆனால் மனிதன் மட்டும் திருந்தியபாடில்லை.

காரணம் அறிவும் மனமும் ஒன்றுபட்டு செயல்படாததே,

அறிவுக்கும் மனதுக்கும் இடையே உள்ள போராட்டமே.

இப்படிப்பட்ட ஒரு போராட்டத்திற்குக் காரணம், பகுத்தறிவு என்ற போர்வையில் உள்ள பொல்லாத அறிவுதான்.

தான் ஒரு பகுத்தறிவாளன், தான் ஒரு அறிவியலாளன், என்ற கர்வமும் ஆணவமும் கலந்த அந்த பொல்லாத அறிவுதான்.

 இவர்களுடைய இந்த கர்வத்திற்கும், ஆனவத்திற்கும் காரணம், 

பகுத்தறிவு என்றால் என்ன? அறிவியல் என்றால் என்ன? என்று தெரியாததே.

அறிவு எப்பொழுது கர்வமும் ஆணவமும் கலக்காத உண்மையான அறிவாகும்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட “நாலடியார்” என்ற இலக்கியத்திலிருந்து ஒரு பாடலை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

“பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்றுகோலால் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லாநோலா உடம்பிற்கு அறிவு.”

“பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்” என்ற வரிக்குப் பெருள்‘பாலால் கழுவி பின் உலர்த்தி பின் பாலால் கழுவி பின் உலர்த்தி இப்படி பலமுறை பலநாள் செய்யப்பட்டாலும்’

“வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று” என்ற வரிக்கு பொருள்‘கரித்துண்டானது வெள்ளை நிறத்தின் பக்கம் கூட நிற்காது.’

“கோலால் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா நோலா உடம்பிற்கு அறிவு”ஒருவனுடைய அறிவை வளர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அறிவியல் கருத்துக்களை அவன் காது வழியாக தினித்தாலும் ஆத்மார்த்தமான ஈடுபாடு இல்லாத உடம்பில் அந்த அறிவு போகாது.

அதாவது ஒரு பொருளை ஆய்வு செய்யும் போது மனப்பூர்வமான ஈடுபாடு இல்லை என்றால், அங்கு மெய்ஞானம் பக்கத்தில் கூட வராது. 

மெய்ஞானம் இல்லாத விஞ்ஞானம் (அறிவியல) முழுமை பெற்றதாகாது. ( இங்கு மனப்பூர்வமான ஈடுபாடில்லாத அறிவு - கரித்துண்டு, படித்த புத்தகங்கள் - பால் )

இங்கு ஒரு நுணுக்கமான விஷயத்தை நுணுக்கமாக கவனிக்க வேண்டும்

அறிவும் மனமும் இனைந்து செயலாற்றும்போது மனதின் ஆதிக்கம் அறிவின் ஆதிக்கத்தைவிட சற்று கூடுதலாக இருந்தால் கூட அங்கு மூடநம்பிக்கை முளைக்க ஆரம்பித்துவிடும் அபாயம் உண்டு.

அதே சமயம் மனதின் ஆதிக்கத்தைவிட அறிவின் ஆதிக்கம் சற்று கூடுதலாக இருந்தால் கூட அங்கு தீமையின் ஆதிக்கம், அழிவின் ஆதிக்கம் முளைக்க ஆரம்பித்துவிடும் பேரபாயம் உண்டு.


எனவே மனமும் அறிவும் ஒன்றை ஒன்று மிகாமல் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதே மிகச்சிறந்த அறிவு. அதுவே ஞானம.

வெற்றி நிச்சயம்..............


இந்த கட்டுரையின் நோக்கம் குறைந்தபட்ச தகுதியை உடைய அனைவராலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும். என்ற கருத்தை இன்றைய இருபால் இளைஞர்களுக்கு உணர்த்துவதே....


நீ எங்கு இருந்தாய்?, எங்கு இருக்கிறாய்?, எப்படி இருந்தாய்?, எப்படி இருக்கிறாய்? என்பது முக்கியம் இல்லை. எங்கு செல்கிறாய்? எப்படி செல்கிறாய்? என்பதுதான் முக்கியம்.

உங்களின் கடந்த காலத்திற்கு நீங்கள் பொறுப்பல்ல...ஆனால் உங்கள் வருங்காலத்திற்கு நீங்கள், நீங்கள் மட்டுமே முழு பொறுப்பு
.
இளைஞர்களே உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்.... மறந்துவிடாதீர்கள்...


சாதணையாளர்கள் அனைவருமே சாமானியர்களாக இருந்தவர்கள்தான்.


உங்கள் லட்சியம் பிறர் பார்வையில் உயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமோ கட்டாயமோ இல்லை. உங்கள் மனதுக்குப் பிடித்ததாக, நேர்மையானதாக, இருக்க வேண்டும்.


உங்கள் மனதுக்குப் பிடித்ததாக, நேர்மையானதாக இருந்தால் மட்டும் போதாது, உங்கள் லட்சியத்தை அடைவதற்கு கடைபிடிக்கும் வழிமுறைகளும், உழைப்பும் நேர்மையானதாகவும், உண்மையானதாகவும், ஆத்மார்த்தமானதாகவும் இருக்க வேண்டும்


எவ்வளவு வேகமாக பயணிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எந்த திசையில் பயணிக்கிறோம் என்பதுதான் முக்கியம்..


இளைஞனே! நீ எண்ணித் துணிந்தபின் உன்னை உலகம் முழுவதும் எதிர்த்தாலும் கொண்ட குறிக்கோளை கைவிட்டுவிடாதே. - ‘சுவாமி’ விவேகானந்தர்


உன்னால் முடியும் தம்பி, தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி. – சொன்னது – யாரோ


உங்கள் லட்சியத்தை யாரிடமாவது கூறும்போது, உங்கள் கனவு சுக்கு நூறாகும்படி அவர்கள் உங்களை கேலி, கிண்டல் செய்யலாம்.


உதாரணமாக நீங்கள் ஒரு சாதாரணமான நிலையில் இருக்கின்ற சாமானியன். உங்கள் லட்சியம் நீங்கள் ஒரு கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்பது. அதற்கான (PROJECT) திட்டமும், திறமையும் அசைக்க முடியாத நம்பிக்கையும் உங்களிடம் உள்ளது. இந்த லட்சியத்தை உங்கள் உற்றார் உறவினர்களிடம் கூறும்போது அவர்கள் உங்களைப் பார்த்து மிகவும் கேவலமாக, 


போடா...லூசுபயலே... போய் ஆகர வேலையைப் பார்ரா டேய்.....
கோடீஸ்வரன் ஆகர மொகறையப் பாத்தா தெரியாது?
இவனெல்லாம் கோடீஸ்வரன் ஆயிட்டாலும்....
எங்கிட்ட சொன்னமாதிரி வேற யார்கிட்டயும் சொல்லிரப்போற...
மொசபுடிக்கிற நாய மூஞ்ச பாத்தாலே தெரியாது?
பத்து ரூபாய்க்கே வக்கில்லாதவன்... இவனெல்லாம் கோடீஸ்வரன் ஆகப்போரானாம்....
இப்படியே சொல்லிக்கிட்டிரு... ஒருநாள் இல்லாட்டி ஒருநாளைக்கு சட்டைய கிழிச்சிகிட்டு பயித்தியமா அலையப் போறே....
....என்று உங்கள் கனவு லட்சியம் எல்லாமே தகர்ந்து தவிடுபொடியாகும்படி ஏளனம் செய்வார்கள்.


இந்த சூழ்நிலையில் நீங்கள்
மனிதா... உன் மனதை கீறி விதை போடு மரமாகும்.
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்.
என்ற கவிஞர் பா. விஜய் -ன் வரிகளை திரும்பத்திரும்ப சொல்லிக் கொள்ளுங்கள்.

விமர்சனம் என்பது நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட, பிரிக்க முடியாத ஒன்று.
ஒவ்வொரு குழந்தையுமே பிறந்த உடனேயே விமர்சனத்திற்கு ஆளாகிறது.
“முழியப்பார் திருட்டு முழி, அவனுடைய அப்பனாட்டமே”


இளைஞர்களே விமர்சனத்தைக் கேட்டு துவண்டுவிடாதீர்கள்.
அந்தக் கேலி விமர்சனங்கள் உங்கள் லட்சியக் கனவை வலுவடையச் செய்யவேண்டுமே தவிர, நொறுங்கச் செய்துவிடக்கூடாது.


உளி படாத கல் சிலையாவதில்லை.


என்னாலும் முடியும் என்று நினைப்பது நம்பிக்கை
நிச்சயமாக என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை.
என்னைத் தவிர வேறு எவ(ளா)னாலும் முடியாது என்பது ஆணவம்.


நம்பிக்கை உன்னை உயர்த்தும்
தன்னம்பிக்கை உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தும்.
ஆணவம் உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் அழிக்கும்


பெரும்பாலான இளைஞர்கள், தான் மட்டும்தான் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பதாகவும், மற்ற அனைவருமே சந்தோஷமாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டு,
“என்னடா வாழ்க்கை, எப்பப்பார்த்தாலும் போராட்டம்.. போராட்டம்...போராட்டம்...
வாழ்க்கையே போரடிசிப் போச்சி” என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள்.


இப்பூவுலகில் மனிதன் மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவனும் ஏதாவது ஒரு விஷயத்திற்காக போராடிக்கொண்டுதான் இருக்கின்றன.


போராட்டமே எனக்கு வாழ்க்கையாகிவிட்டது. என்று அங்கலாய்த்துக்கொள்கிறாயே, இதற்குக் காரணம் என்னவென்று யோசித்ததுண்டா?


எதையாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணமதான், காரணம்.


என்ன உளறுகிறீர்? எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? 


ஒரு சின்னக் கதை. (கதையல்ல நிஜம)


யுனிவர்சிட்டியிலேயே முதலாவது மாணவனாக தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்ற ஒரு நடுத்தர வர்க்க B.E பட்டதாரி, தகுதியானவர்களுக்கு மட்டுமே வேண்டும் உதவியை தாராளமாகச் செய்யக்கூடிய ஒரு மிகப்பெரிய செல்வந்தரிடம் உதவி கேட்கச் சென்றான். அந்தப் பெரியவரும், வா தம்பி என்ன விஷயம்? என்று கேட்டார்.
இந்த பட்டதாரியும், தன் கல்வித் தகுதியைக் கூறி அதற்கான சான்றிதழ்களையும் பெரியவரிடம் காட்டி, ஐயா நீங்கள் உதவி செய்தால் ஏதாவது தொழில் செய்து பிளைத்துக்கொள்வேன். அல்லது ஏதாவது நல்ல கம்பெனியில, ஏதாவது நல்ல வேலையில சேத்துவிட்டீங்கனா உதவியா இருக்கும். என்று கேட்டான்.


அதே சமயத்தில், 12-ம் வகுப்பு படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் மேற்படி பெரியவரிடம் உதவி கேட்க வந்தான் ஒரு இளைஞன். அந்தப் பெரியவர் அவனையும் வாதம்பி, என்ன விஷயம்? என்று கேட்டார்.


இந்த இளைஞனும், தன் நிலையைக் கூறி 4 சிந்து மாடு வாங்கிக் குடுத்தீங்கன்னா பத்து வீட்டுக்கு பால் ஊத்தி வர்ர வருமானத்துல வீட்டுசெலவையும் பாத்துக்கிட்டு, நானும் தபால்ல மேல படிச்சிக்குவேனுங்க. என்று கேட்டான்.


அந்தப் பெரியவர் மறுநிமிடமே தன் மகனைக் கூப்பிட்டு இந்த இளைஞனுக்கு (12 ம் வகுப்பு) வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து தரும்படி சொன்னார். அவரும் 6 சிந்து மாடுகளை வாங்கிக் கொடுத்து, அவற்றை பராமரிக்கத் தேவையான கொட்டகையும் அமைத்துக் கொடுத்தார்.


அனால் B.E பட்டதாரிக்கு பிறகு பார்க்கலாம். என்றுகூறி அனுப்பிவிட்டார்.


சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மாடு வாங்கிய இளைஞன் M.A., Ph.D முடித்துவிட்டு ஒரு கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அந்த B.E பட்டதாரி அந்த சமயத்தில்தான் ஒரு தனியார் நிறுவனத்தில் தனது +2 படிப்பின் அடிப்படையில் சாதாரண வேளையில் அமர்கிறான்.


அந்தப் பெரியவர் ஏன் B.E பட்டதாரிக்கு உதவி செய்யவில்லை?


அந்த B.E பட்டதாரி அந்தப் பெரியவரிடம் கேட்டதை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்களேன்...


அவன் என்ன கேட்டான்? ஏதாவது தொழில், ஏதாவது கம்பெனியில், ஏதாவது வேலை என்றுதான் கேட்டானே தவிர, இன்ன தொழில், இன்ன கம்பெனி, இன்னவேலை என்று கேட்கவில்லை. அதாவது அவனுக்கென்று ஒரு குறிக்கோள் இல்லை.


ஆனால் இந்த +2 இளைஞனின் வார்த்தைகளில் அவனுடைய தெளிவான சிந்தனை தெரிகிறது. தீர்க்கமான எண்ணம தெரிகிறது.


எனவே, இளைஞனர்களே! எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பதை விட 


இதைத்தான் நான் சாதிப்பேன் என்று ஒரு உறுதியான தீர்மானமான கொள்கையோடு போராடுங்கள் வெற்றி நிச்சயம்.

Tuesday 7 August 2012

மும்மூர்த்திகளும் அவர்களின் வேலைகளும்....

அன்பானவாசகப் பெருமக்களே வணக்கம்.

இந்தப்பதிவில் முமூர்த்திகளும் அவர்களின் வேலைகளும் என்ற தலைப்பில் மும்மூர்த்திகள் யார்? யார்? அவர்களின் வேலைகள் என்ன?என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

மும்மூர்த்திகள் : பிரம்மா, விஷ்ணு, சிவன்

இவர்களின் தொழில் : பிரம்மாவின் தொழில் ஆத்தல், விஷ்ணுவின் தொழில் காத்தல், சிவனின் தொழில் அழித்தல்

மேற்படி மும்மூர்த்திகளின் முத்தொழில்களில் முதல் இரண்டுக்கும் பொருள் அவைவருக்கும் தெரியும். ஆனால் சிவனின் தொழிலாகிய அழித்தல் என்பதை பொதுவாக பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட உயிர்களை அழிப்பது என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையில் அழித்தல் என்பதற்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அழித்தல் என்பதே சரியானதாக இருக்கும்.

மேற்படி கருத்துக்களை அப்படியே வரிசை மாறாமல் மாதா, பிதா, குரு இவர்களுடன் பொருத்திப் பாருங்கள்.....

மாதா - பிரம்மா

பிதா - விஷ்ணு

சிவன் - குரு

ஆனால் தற்காலத்தில் சிவனின் தொழிலாகிய மும்மலங்களை அழித்தலை இன்றைய சிவபெருமான்கள் (ஆசிரியர்கள்) செய்கிறார்களா?

இன்றைய ஆசிரியர்களில் சிலர், இவர்களால் அழிக்கப்படவேண்டிய மும்மலங்களின் மொத்த உருவமாக இருக்கிறார்களே, என்பதை நினைக்கும்போது மனது மிகவும் வலிக்கிறது.

உதாரணத்திற்கு சமீபத்திய பள்ளிக்கூடத்தில் நடக்கும் கொடுமைகள் பற்றிய செய்திகள்

ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்படும் உதவித் தொகை பல லட்சம் மோசடி செய்த 87 தலைமை ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் என்ற செய்தி

இத்தகைய சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தானே நடக்கிறது

அன்றாடம் நடக்கும் ஏராளமான மோசமான சம்பவங்களில் இதுவும் ஒன்று, எனவே இதை பெரிது படுத்த தேவையில்லை என்பது சிலரின் வாதமாக இருக்கிறது

உண்மைதான் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே நடக்கிறது என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டால் இன்னும் பத்து இருபது ஆண்டுகள் கழித்துப் பார்த்தோமானால், இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த இந்த மோசமான செயல் எங்கும், எதிலும், எப்பொழுதும், யாராலும் தடுக்கமுடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

சுமார் 1950 களில் நூறு இருநூறு என்ற அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த லஞ்ச லாவண்யங்கள் அடுத்த பத்தாண்டில் 1960 களில் லட்சக்கணக்கில், 1970 களில் கோடிக்கணக்கில், தற்போது ஒருலட்சத்து அறுபதாயிரம் கோடி, 10 லட்சம்கொடி என்று வளர்ந்து நிற்கிறதே அதுபோல மேற்படி பிரச்சனையும் வளர்ந்து விட்டால் நம்நாட்டின் நிலையை நினைத்துப்பார்க்கமுடிகிறதா?

மேலும் இன்றைய தனியார் பள்ளிக்கூடங்களின் நிலையை பார்க்கும்போது அவை நம் குழந்தைகளை  வெறும் மார்க் எடுக்கும் இயந்திரங்களாக மாற்றும் பட்டறைகளாகவும், ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்திகளாகவும், இருப்பதை பார்க்கும்போது .....

இன்னும் எவ்வளவோ எழுதணும் போல இருக்கு..

ஆனால் கோபத்தில் ஏதேனும் தவறாக எழுதிவிட்டால்.... என்ற பயம் வந்துவிட்டது.


Tuesday 31 July 2012

அண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....

அன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் அல்லது ஊழல முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சரியான கொள்கையாக இருக்க முடியும், இருக்க வேண்டும்.

இதில் எந்த ஒரு இந்தியருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.

அண்ணா ஹசாரே அவர்கள் ஊழலை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார். இவருடைய போராட்டத்தை ஒட்டு மொத்த இந்தியாவும் ஆதரிக்கிறது.

ஆனால் இன்றைய சூழ்நிலையில்,

அதாவது ஊழலின் மதிப்பை பார்க்கும்போது 2 G யில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி, சுரங்கத்துரையில் பலலட்சம் கோடி  என்று கோடிக்கணக்கை எல்லாம் தாண்டி, ஆயிரம் கோடி எல்லாம் தாண்டி, லட்சம் கோடி என்று வளர்ந்து ஆலமரமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில், (செய்தி தாளின் அடிப்படையில் கூறப்பட்டது.)

நமது பிரதமர் "கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தவறான போக்கை கண்டிக்க முடியவில்லை" என்ற வகையில் தொலைக்காட்சியில் பேட்டி தந்துள்ள இன்றைய சூழ்நிலையில் 

ஒரு அயல்நாட்டு பத்திரிகை நமது பிரதமரை செயல்படாத பிரதமர் என்று விமர்சித்திருக்கும் இன்றைய சூழ்நிலையில்

அன்னா ஹசாரே அவர்களின் போராட்டம் சரியானதுதானா? முறையானதா?

வலுவான லோக்பால் சட்டம் தேவை என்று ஹசாரே யாரைப்பார்த்து கேட்கிறார்? ஊழல்வாதிகளைப் பார்த்து கேட்கிறார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் லோக்பால் சட்டத்தை நாங்கள் கொண்டுவந்தோம். அன்றைய பி ஜே பி இதை எதிர்த்தது. என்று காங்கிரசார் கூறுகின்றனர்.

ஆனால் அன்று எதிர்த்தவர்கள் இன்று ஆதரிக்கிறார்கள். அன்று ஆதரித்தவர்கள் இன்று லோக்பால் சட்டத்தை மதிக்கவே இல்லை.

ஏன்?

இன்றைய சூழ்நிலையில் ஊழலை ஒழிக்க முடியுமா?

குறைந்தபட்சம் கட்டுப்படுத்தவாவது முடியுமா?